Pulampal

Pulampal

Tuesday, March 18, 2008

எது அவமானம்?

சரிநிகர் 123 இல் "கோணேஸ்வரிகள்" என்று தலைப்பிட்டு கலா ஒரு கவிதை எழுதியிருந்தார். இக்கவிதையைத் தொட்டு பல விமர்சனங்களை சரிநிகர் எதிர்கொண்டு சிலவற்றை வெளியிட்டு இருந்தனர். ஆணாதிக்கம் இனவாதத்துடன் இணையும் போது ஒரு தமிழ்ப் பெண் சந்திக்கும் இனவாத ஆணாதிக்கத்தை மிக அருமையாக துல்லியமாக படம் பிடித்து கலா காட்டியிருந்தார். இதன் மூலம் யதார்த்த சமூகத்தின் இயலாமைக்கு சவால் விட்டுள்ளார். அதே நேரம், இனவாதம் சிங்களப் பெண் மீதான இராணுவ, ஆணாதிக்க வன்முறையை ஒத்தி வைத்துள்ளதை அழகாகச் சுட்டிக் காட்டுவதன் மூலம் இலங்கை அரசியலை சரியாக, மிக நேர்த்தியாக சுட்டிக் காட்டுகின்றது இக்கவிதை.

ஆனால் பெண்ணியல் அமைப்பாளர்கள், ஜனநாயகவாதிகள், பெண்கள் பத்திரிகையாளர்கள் எனக் கொஞ்சப் பேர் இதை எதிர்த்து அழுது வடிந்துள்ளனர்.

தமது வர்க்க கட்டமைப்புக்கு இசைவாக ஆணாதிக்க நிலையில் நின்றும், இனவாதக் கட்டமைப்பின் மீது நின்றும் நடந்த ஆணாதிக்க வன்முறையை மூடிமறைக்கும் போது அல்லது மௌனமாகி கைவிடும் போது, ஒரு பெண்ணின் மீதான கொடுமையை சரியாக சுட்டும் போது எதிர்த்துப் புலம்பியுள்ளனர். நாம் முதலில் கலாவின் அக்கவிதையைப் பார்ப்போம்.

கோணேஸ்வரிகள்...!

நேற்றைய அவளுடைய சாவு - எனக்கு
வேதனையைத் தரவில்லை.
மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்.
அன்பான என் தமிழிச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே: வாருங்கள்
உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்

என் அம்மாவே உன்னையும் தான்.
சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.

பாவம்
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்.
வீரர்களே! வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா எல்லாம்
அவளோடு நின்றுவிடாதீர்!

எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.

ஆகவே

வெடிவைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.

சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை.


கோணேஸ்வரி 17.05.1997 அன்று பத்து பொலிசாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பெண்குறியில் கிரனைட் வைத்து கொல்லப்பட்ட மட்டக்களப்பு 11ம் கொலனியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்.

காலம் காலமாக நடக்கும் இனவாதச் சாவுகள் பழக்கப்படுத்தப்பட்ட நிலையில் அவை அதிரவைப்பதில்லை. உணர்வுகள் மரத்துப் போகின்றன. சமாதானத்திற்காகப் போராட முடியாத அரசியல் குரோதத்தில் முடங்கிப் போகும் போது, நீங்கள் நிர்வாணமாக ( உடல் மற்றும் இனவாத அடிப்படை எப்படியாயினும் ) இருப்பது தான் உங்கள் நிலை. ஏனெனின் சமாதானம் என்பது தேசங்களின் சுயநிர்ணய உரிமையில் ஏற்படுகின்றது. அந்த தேச சுயநிர்ணய உரிமையை, அது சார்ந்த சமாதானத்தை நிலைநாட்டக் கூடிய அரசியல் வர்க்கப் போராட்டமே. அதற்காக என்ன செய்துள்ளீர்கள்; என்பதே இதன் சாரம். புத்தரின் பேரால் புத்தரைத் திரித்தே சமாதானம் பேசுகின்றனர் (இங்கு புத்தரை அல்ல) யுத்தவாதிகள். சமாதானத்துக்காக போர் புரியும் இனவாதிகளின் சமாதான ஆணாதிக்க வக்கிரத்தை தீர்க்க யோனியை அரசியல் அற்ற நிதர்சனமானதென்றாலும், சமூகம் ஆணாதிக்கத்தில் யோனியைத் திறந்து தான் வைத்திருக்கிறது யதார்த்தத்தில். ஏனெனின் யோனி மீது இனவாதம் தனது இனவாத ஆணாதிக்கத்தால் பெண்ணின் கற்பு உரிமையை குதறும் போது, மௌனம் சாதிக்கும் இனவாத பெண்ணியத்தின் முன் யோனி, அரசியல் அற்ற நிதர்சனமான பிம்பம் தான். அதே நேரம் இயல்பான ஆணாதிக்க சமூக கண்ணோட்டத்தில், பெண்ணை யோனி வழியாக காண்பதும், பண்பாடு கலாச்சார வேர்களை யோனி வழியாக திணிக்கும் போது, இயல்பான சமூக ஆணாதிக்கம் யோனியை நிர்வாணமாக காண்கின்றது, ஆராய்கின்றது.

ஆணாதிக்க இன வக்கிர அடையாளத்தையும், இதற்கு எதிரான எழுச்சியையும் சிதைக்க யோனியின் உள்வைத்து வெடிக்க வைக்கும் கைக்குண்டு. இதுவே பொதுவான ஆணாதிக்க கற்பு நிலையும் கூட. யோனிக்குள் தேடும் கற்பு இனவாதத்துக்கு எதிராக போராடுபவர்களின் இன்றைய பொதுக் கண்ணோட்டமாகும். இதை எதிராக காட்டி மறுக்கும் சிலரின் கண்ணோட்டத்தில் பெண்ணின் கற்புரிமையை, அதாவது யோனியில் திறந்து பொது விபச்சாரம் செய்வதாகும். இப்படிப் பல. பிறக்கும் குழந்தை தனது பிறப்புக்கு பழிதீர்க்கவும், ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்டவும், சமாதானத்தை நிறுவும் வழியை அடைக்க, போராடாது இருக்க, குழந்தை பிறக்கும் வழியிலேயே (யோனியில்) வைக்கும் குண்டுகள். பெண்ணின் உறுப்பு மீது இந்தச் சமாதானவாதிகளின் கருணை நாளை சிங்களப் பெண்கள் மீது பாயத் தயாராக உள்ளது. இது தான் கவிதை யின் அடிப்படை.

ஆணாதிக்க அதிகார இனவாதிகள் மட்டும் தான் இதற்கு எதிராக ஊளையிடுவார்கள். பண்பாடு என்பர். பெண்மை என்பார்கள். ஆபாசம் என்பார்கள். ஏனெனில் ஆணாதிக்க ஒழுக்கம் இவையல்லவா? இதை எதிர்த்துப் போராட அழைப்புவிடுகிறார் கவிதை மூலம். இதை சமாதானத்துக்காகவா செய்தீர்கள்? எனக் கேட்க இது இனவாதக் காய்ச்சலை உண்டாக்கிறது. அருவருப்பு உணர்ச்சியை தருகிறது என்கிறார் பெண்ணிலைவாதி செல்வி திருச்சந்திரன். நாகரீகம் தாண்டிய கவிதையாம். ஆணாதிக்க உலகமயமாதல் உலகைச் சார்ந்த நாகரீகத்தை கோரும் செல்வி திருச்சந்திரன்.

யோனி, நிர்வாணம் என எழுதுவது அவமானம் என்கின்றனர். உயிரியல் படிக்கும் ஆண், பெண், மருத்துவம் படிக்கும் ஆண், பெண், இதை யதார்த்தமாய் கேட்கின்றனர். சொல்லுகின்றனர். அருவருப்பாக அல்ல. பாலியல் கல்வியின் அவசியத்தை பார்ப்பனிய இந்து மதம் இப்படித்தான் எதிர்க்கின்றது. ஆனால் ஆணாதிக்க சமூகம் பெண்ணைப் பொத்தியதைப் போல், இதைப் பொத்தி மூடி மறைத்து அநாகரீகம் எனக் கூறுவதன் மூலம,; அந்தப் பெண்ணின் யோனி கற்பழிப்புக்குட்பட்டதையும், அதை குண்டுவைத்து தகர்த்த வக்கிரத்தையும் மூடி மறைத்து நியாயப்படுத்துகின்றனர். இதை சமாதானத்துக்கான யுத்தம் மீது செய்வதை மறைத்து, யுத்தத்தை சமாதானத்தின் பேரில் பாதுகாக்க முனைகின்றனர். இதன் மூலம் இனவாத ஆணாதிக்கத்தையும், இயல்பான யதார்த்த ஆணாதிக்கத்தையும் தமது வர்க்க நலனில் இருந்து பாதுகாக்கின்றனர்

நன்றி: தமிழ் அரங்கம்

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.